விழித்தெழுந்த
விடியற்காலை பொழுதொன்றில்
ஒழுங்கில்லாது கிடக்கின்றது
உன் நினைவு..
அள்ளிக்கூட்டி அறையெங்கும்
உன்னை இல்லாது செய்ய வேண்டும்
சொப்பனங்களில்
நீ பேசிய வார்த்தைகளின்
ஏகாந்த சுவைக்குள்
காணாது போன என் உயிரை
கண்டெடுக்கவேண்டும்..
மலராத மண்தோட்டம் ஒன்றுக்குள்
உன்னை விதைத்தாகவேண்டும்..
அலையலையாய் அல்லாடிக்களைக்கின்ற
இறகுகளிடத்தில் உன்கதை
சொல்லாதிருக்க செய்யவேண்டும்..
தரப்படாத
உனது முத்தங்களுக்காய்
தடித்த எனது உதடுகளை
இந்த அதிகாலை பனிமேடுகளில்
பதியம் செய்யவேண்டும் ..
கண்கள் திறக்கையில்
எனது ஆடைகள்
நீக்கப்பட்டு....
அவைகளை களவாடியும்
போனவன் நீ..
அத்தனையும் அழித்தாயிற்று...
முற்றம் வந்து முந்தியதினம்
தன்பசி முறையிட்டு போன
காகத்திற்கு உன் காதலை தூவிவிட்டேன்
தின்று தீர்க்கிறது...
அவ்விடம் மெல்ல மெல்ல
நிர்வாணமாகிறது
மீதம் நான் மட்டும்