Thursday, January 28, 2010

வெறுமை

வீதி வீதியாய்
அலைக்கழிகின்ற
தீரவியலா துன்பத்தின்
நெரிசலில்
சிக்குண்டு விடுபட்ட
மாமிசச்சிலையின் பசி
சில பருக்கைகளில்
தீர்ந்திருக்கும்
தன் வசமிழந்து
பொழிகின்ற மழையின்
தீண்டலில்
உதறி எழுகின்ற
விளைச்சலென
விண்ணையும்
முட்டும்
சோக விருஷ்டம்
அதன் உக்கிரத்தை
தூவி இருந்தது
முகம் சுளித்து
பற்றில்லாமல்
பயந்து நகர்கின்ற
பருவ பெண்களையோ
கடை முன் கையேந்தும்
பசியையும்
மதுரங்களில் படபடக்கும்
ஈயையோ
ஒரு சேர விரட்டும்
கைகளுக்கோ
மீந்த உணவு
சிறு பாலிதீன்
பைகளில் திணித்து
தருகின்ற
இரக்க மனதுகளுக்கோ
அவள் இளைத்திருக்கவே இல்லை
வழியெங்கும்
விரிந்து கிடக்கிறது
அவளுக்கான பிரயாணம்..

Saturday, January 16, 2010

மீண்ட உயிர்ப்பு

அரைஞான் கயிற்றுக்குள்
அடைப்பட்டிருந்த
அரைக்கால் சட்டை துவாரங்களில்
தெரியும் நிர்வாணம்
வறண்ட தசை புறமெங்கும்
வழிகின்ற உதிரம்
துளி பிரக்ஞைகளேதுமின்றி
மெல்ல சொல்லட்கரிய
வார்த்தைச்சாவிகளோடு
மென்காற்று மண்டலங்களை
காலம் உள் நுழைக்கின்றது.
ஆடை துவைத்துக்குளித்த

அகண்ட இரவில்
மௌனமாய் நகர்த்தப்பட்டிருந்த
கனவு பரிமாறிய முத்தத்தில்
மடிந்த நாவின் நீளம்
உன்னெட்டும் தூரம்
துழாவி
அடிவயிற்றில் அழுந்திய ரேகைகள்
முடிந்திருந்த ஒற்றை தின பயணத்தைச்
சொல்ல முயல்கையில்
கட்டியெழுப்பியசாரைத்தூண்களென
விம்மி தளும்பிய தேம்பல்கள்.
உன் தேகம் நனைத்த

நம் இருத்தல்களையும் நிரப்பிய
தீர்க்கமானதொரு கணத்தில்
ஆள்துயரங்களனைத்தும்
அவ்வறை ஓரங்களில்
இளைப்பாறியது
புதருக்குள் மறைத்திருந்த
நிராசைகள் ஒவ்வொன்றாய்
கொத்தி தின்ற காகம்
களைத்து
வெள்ளை வெளிச்சம் தெளிகையில்
பிரம்மாண்டமானவிரு
கருத்த சிறகுகள்
முளைத்திருக்கக்க‌ண்டேன் முதுகில்.
இன்னும் நான் மரித்திருக்கவில்லை.

Tuesday, January 5, 2010

பிரபஞ்சம்

அனாதை பிணமொன்று
அன்று காலையில்தான்
புதைக்கப்பட்டிருக்கவேண்டும்
தூவிய மலர்களுக்கு
இன்னும் மரணம்
விதிக்கபட்டிருக்கவில்லை
சடலக்குழிகளுக்குள்
வளர்க்கின்றது
தலைமுறையை
உடன் சில புற்களும்

Sunday, January 3, 2010

கிரகப்பிரவேசம்

புழு தின்ற இலையில்
விடுபட்ட பாகம்
சிறகாகி வட்டமிடும்
வெளியெங்கும்
ஊருக்கு ஒதுக்குபுறம்
கடத்தப்பட்ட
காலம் கடந்துபோன வீடு
எச்சத்தில்
விழுந்த தானியம்
உலைக்குள் உருகி
பிழைத்தது பசியற்ற
வற்றுகளாய்
பொய்த்திருக்கும் புதர்களுக்குள்
விபச்சாரிகளின்
அழுகையில்லாத மௌனம்
மறுபடியும் விதைக்கப்படுகின்றது

குதிருக்குள்
ஊர் செய்ய...