Sunday, January 26, 2014

தெளிவத்தை ஜோசஃபும் தங்கையாவும்









நேற்று காலை தங்கை வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவர், ஊருக்கு திரும்புவதை சொல்வதற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். டீயுடன் நலன் விசாரிப்புகளுமாக பேச்சு நீண்டு கொண்டிருந்தது. ஆஹிலுக்கு கைக்கெட்டும் உயரத்தில் புத்தகங்கள் இருப்பதால் அவனிடம் விளையாட ஆளின்றி, அவனுக்கு ஓய்வு தேவைப்படும்போது ஏதேனும் புத்தகம் ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு அப்புத்தக ஏடுகளிடம் பேசத்தொடங்கிவிடுவான். இப்படி ஜெயமோகன், சுகுமாரன், பிரான்ஸிஸ்கிருபா, தேவதேவன் வழியே..... கடைசியாக வாங்கப்படும் புத்தகம் அவனுக்கு நெருக்கமாகிவிடும். இன்று அவனது கையில் மாட்டியவர் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசஃப். குடை நிழலை விரித்துக்கொண்டு வழக்கம்போல் புத்தகத்துடன் உரையாடிக்கொண்டிருந்தான் . வந்திருந்த பெரியவர் “ஆஹில் வாங்க என்ன புக் அது? தாத்தாக்கு குடுங்க’ என்றதும் அவரது கையில் அந்த புத்தகத்தை கொடுத்தான் .


வாங்கியவர் ‘ங்கொப்புரான !!’ என்று ஆச்சரியமாக அந்த புத்தகத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கண்களை மூடிக்கொண்டார். நான் பதறி, என்னாச்சுங்கய்யா என்றேன் . ’தெளிவத்தைம்மா’ .ஆச்சரியம் மாறாத கண்களோடு வார்த்தையற்றிருந்தார். விஷ்ணுபுரம் விருது இந்த முறை இவருக்குதான் கிடைச்சிருக்குய்யா . நா இப்பவரைக்கும் இவர் கதைய வாசிச்சதில்ல. இப்பதான் வாங்கினேன் - தெளிவத்தை புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தார் - அநேகமாக நான் பேசியது அவருக்கு கேட்டிருந்தால் ஆச்சரியம்தான்.


’இவர் என்னோட ஆசிரியர்மா. இவரோட எழுத்துக்குன்னு ஒரு கூட்டமே அமைச்சி கொண்டாடியிருக்கோம் இந்த மனுஷனை’ தெளிவத்தை ஜோசஃப் எழுதிய கதைகள் அத்தனையும் சொல்லிக்கொண்டும் அந்த கதாபாத்திரங்களை தன் சொந்தங்களைப்போல பாவித்த காலமும் உண்டெனக் கூறி நெகிழ்ந்தார்.


தேயிலைத்தொழிலாளர்களின் வாழ்வைக் குறித்தான தெளிவத்தையின் எழுத்தில் லயித்து போனதன் அங்கமாய் தெரிந்த பெரியவரின் கைகளில், ஒரு பச்சிளம் குழந்தையப் போன்றதொரு பாவிப்போடு விரித்திருந்தார் குடை நிழலை.


1957வாக்கில் மொறக்கொல்லை பள்ளியில் ஆசிரியராக கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் தெளிவத்தை ஜோசஃப் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அப்பள்ளியில் அவரது மாணவன் தங்கையா . இன்று அறுபது வயதுக்கு சொந்தக்காரர் . நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் தெளிவத்தையை நினைத்து பூரித்து போகிறார். பள்ளிக்காலங்களின் அனுதின நிகழ்வுகளை பகிருவதில் பூரிப்பில் அவரது பிராயம் குறைந்தது. விடுமுறை நாட்களில் நடந்தே மலைமேடுகளில் வேடிக்கை காட்டுவதற்காகவே அழைத்துச் சென்றதையும். பாட்டு நடனம் விளையாட்டுப்போட்டியென மாணவர்களுக்கொரு தூண்டுகோல் தெளிவத்தை அவர்கள். குறும்புத்தனங்களுக்காய் வாங்கிய பிரம்படிகளை நினைத்து, உடலை சுருக்கி சிரித்துக் கொண்டார் தங்கய்யா. தனது மாணவர்களை கட்டுப்பாட்டோடும் அன்போடும் அணுகிருக்கிறார் தெளிவத்தை.













தங்கையா தனது வாழ்க்கைக்கும் ஆசானாகவே தெளிவத்தை ஜோசஃபை கருதினார். அவரது கதைகள் மூலம் தேயிலை பணியாளர்களின் நெருக்கடிகளையும் , தொழிலாளர்கள் ,தங்களின் வாழ்க்கையை கட்டுக்குள் வைத்திருப்பதே தெரியாமல் , தங்களது சுயகவுரவம் இழந்திருப்பதையும் உணராதிருப்பதை விளக்கிச் சொல்ல எண்ணினார் . இதற்கு உறுதுணையாக பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சீர்திருத்தம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார்கள். தொழிலாளர்களுக்கு கல்வியறிவை மேம்படுத்த பெரும்பாடுபட்டனர். அதன் மூலம் திண்ணை பள்ளிக்கூடம் என்ற ஒன்றை ஆரம்பித்து படிக்கவியலாத குழந்தைகளுக்கு ஆங்காங்கே பொது இடங்களில் இலவசக்கல்வி அளிக்கப்பட்டது. இப்படி எத்தனையோ செய்தும் இன்னும் பூரணமாக ஏற்படாத மாற்றத்திற்கு சலித்துக்கொண்டார் தங்கைய்யா.


வாழ்க்கை தங்களை மலையகத்திலிருந்தும் விரட்டியது. எல்லாம் மறந்து போன நிலையில், இன்றைய தெளிவத்தை பற்றின நினைவுகள் திடகாத்திரமான, அன்றைய சீர்திருத்த இளைஞனாக்கியிருந்தது தங்கய்யாவை. தெளிவத்தை பற்றி அவர் பேசப்பேச அவர் கிளம்பவேண்டுமென்ற எண்ணம் தற்காலிகமாக மறந்து, பின் நேரங்கழிதலிலிருந்த கட்டாயத்தின் பேரில் விடைபெற்றார். அவரை வழி அனுப்பிவிட்டு சென்ஷியோடு இந்த மகிழ்வான சந்திப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, சேமித்து வைத்த புதிய காசுகள் கொண்ட உண்டியலை சுமந்தலையும் குழந்தையாய் கனத்தது உடல். வீடு முழுக்க தங்கய்யாவின் பேச்சில் மலர்ந்த மலையகத் தேயிலை வாசனை. சந்தோஷமாய் உணர்வுகளை சென்ஷியிடம் பகிர்ந்து கொண்டிருக்கும்போது, அலைபேசி அழைக்க மறுமுனையில் ’’ம்ம்மா... நாந்தான்ம்மா தங்கைய்யா... இன்னைக்கு நா ஊருக்குப் போகல. வந்துகிட்டிருக்கேம்மா வீட்டுக்குதான்’ என்றவர் ’நிறய பேசுவோம்மா’ என்றார் . சரியென்று வீட்டை ஒதுங்க வைத்தேன். வருவது தேயிலைத் தோட்டமாயிற்றே . ஒரு எழுத்தாளர் இந்தளவிற்கு ஒரு வாசகனை கையகப்படுத்தவியலுமா..? எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


விஷ்ணுபுரம் விருது விழாவில் தெளிவத்தை ஜோசஃபை கண்டிருக்கிறேன். நான் தீவிர வாசிப்புள்ளவளாக இல்லையென்றாலும் விஷ்ணுபுரம் விருது தகுந்தவருக்கு கிடைக்கும் என்பது நம்பகமானது. சென்ஷி மற்றும் நண்பர்கள் ஜெயமோகன் மீது கொண்டிருக்கும் மரியாதை அவரது படைப்புகளின் அடர்த்தியை எனக்கு உணர்த்தியது. அதுவே அந்த விருது குழுமத்திடமும் உண்டு. ஒவ்வொரு வருடமும் எதுவும் விளங்காத கடைக்குட்டியாக சென்றுகொண்டிருக்கிறேன். புது மழையில் நனைந்த வாசனையோடே திரும்புவேன். போன வருடம் கவிஞர் தேவதேவனுக்கு விருது வழங்கும்போது கல்பற்றா நாராயணன் பேசியது மனதை பற்றிக்கொண்டதால் மற்ற யாருடைய பேச்சுகளும் நினைவில் நிறுத்தவோ கவனிக்கவோ முடியவில்லை. இந்த வருடம் அழைப்பிதழ் பட்டியலில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மிகுந்த எதிர்பார்ப்பை தந்து வரவியலாது போனார்.


விடுப்புகளில் சென்ஷி வந்தால் ஜெ.மோ. புத்தகங்களை கண்கொட்டாமல் வாசித்து கொண்டிருக்கும்போது எனக்கு ஆத்திரமாக இருக்கும். இருக்கும் புத்தகங்களை அட்டைப்படம் பார்க்க மட்டும் உரிமை தரப்படும் என்ற கட்டளையோடு கடந்து விடும் அவரது விடுப்பும். முப்பது நாட்கள் ஓய்விற்கு பிறகு ஊருக்கு கிளம்பியதும், கலைத்த நினைவுகளோடு புத்தகங்கள அடுக்கி கொண்டிருந்தேன். சென்ஷியிடமிருந்து பறித்து போட்ட ஜெ.மோ.வின் நூறு நாற்காலிகள் ஒரு கலெக்டரின் உண்மைக்கதை புத்தகத்தை வாசித்தேன். வாசித்துகொண்டிருக்கும்போதே சென்ஷியிடமிருந்து அந்த புத்தகத்தைப் பறித்ததற்காய் வருந்தினேன். எவ்வளவு ஈர்ப்பு. அழுத்தம்.. வாழ்வின் உண்மையான பிரதிபலிப்பு. அந்த சூழலை கடக்க மற்றுமொரு ஜெ.மோ புத்தகமே சரியான வழியென ஆயிற்று . அப்படியே நீண்டது.


விஷ்ணுபுரம் விருது விழாவில் இம்முறை ஜெ.மோ. பேசிய ஒரு வாக்கியம் இன்னும் நீங்காமல் மனதில் ஒலிக்கிறது . ‘யானையோடப் பழகி பாருங்க அதைக் கொல்ல மனசு வராது’’ இந்த வார்த்தையைப் போலவே ஆனது எனது மனநிலையும் . அவரது புத்தகம் வாசிக்கத் தொடங்கும்போதெல்லாம் அந்த வாக்கியம் நினைவுக்கு வரத்தொடங்கியது ஒவ்வொரு முடிவிலும். தெளிவத்தை ஜோசஃப் அவருக்கு விருது என்ற அறிக்கையிலிருந்து தெளிவத்தையை அறிமுகம் செய்ய சிறிது கால அவகாசம் தேவையாகி இருக்கும். பெரும்பாலும் தேயிலை மலையக மக்களின் நெருக்கமற்ற பாதையில் நாம் பயணித்து கொண்டிருப்பதால் அந்த எழுத்தின் வலு புரியாமல் இருந்தது. இன்னும் வாசிக்கவுமில்லாமல் குடை நிழல் மடித்தே வைக்கப்பட்டிருக்கிறது. இன்று தங்கையாவுக்கு அந்த புத்தகத்தை நினைவாக அளித்தேன்.


தங்கையா தெளிவத்தை பற்றியும் அவரோடு வாழ்ந்த காலங்களை பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டது மகிழ்வானதாகயிருந்தது. தெளிவத்தை ஜோசஃபின் எழுத்துக்கள் முழுமையாய் ஊடுருவி வாழ்ந்த இம்மனிதனை ஆராதிக்கிறேன் . ஒரு மணிநேரம் உரையாடல் போதாதென அந்த ஆவல் மிகுந்து, வன நாட்களைப் பகிர ஊருக்கு திரும்பப் போய் கொண்டிருந்த ஒருவரை தெளிவத்தையின் எழுத்து, பயணத்திலிருந்து இளமை சூழலுக்கே திரும்ப ஒரு தேயிலைத்தோட்டமாக மாற்றியதை என்னவென்று சொல்ல. இப்படி வாழ்வோடும் தொடர்ந்த எழுத்தை அறிமுகமாக்கி கவுரவமும் அளிக்கின்ற ஜெயமோகன் மீதான அன்பும் மரியாதையும் அதிகரிக்கிறது.



’பழகிப் பாருங்க யானைய கொல்லவே முடியாது.’’

Sunday, January 19, 2014

அவன் - அது = அவள்

எழுத்தாளர் பாலபாரதி அவர்கள் எழுதிய ‘அவன்- அது= அவள்’ நாவல். திருநங்கைகளின் மீது மிகுந்த அக்கறையுடனும் மற்றும் அவர்களது அனுதின நகர்வுகளை பொறுப்புடனும் புலப்படுத்தியிருக்கிறார்.  வெறும் வாசிப்பனுபவத்தை மீறி திருங்கைகளின் வாழ்வு மேம்பட  எடுத்த முயற்சி இந்நாவலின் நோக்கமாகிறது. இந்நாவலின் மூலம் திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு பலம் சேர்க்குமென்ற  நம்பிக்கையுடனும்  எழுதி இருக்கிறார். வாசிப்போரிடையே பெரும் மாற்றத்திற்கான சாத்தியம் நிச்சயம். சக தோழிகளாக தங்களை பாவிக்க எண்ணும் திருநங்கைகளின் வாழ்வு மிக குறுகிய காலத்தில் சீராக்க, கவனத்துக்குள்ளாக்கும் படைப்பு.

 திருநங்கைகளின் அனுபவங்களை அவர்களது வாழ்க்கைச்சூழலில் கிரகித்துகொள்ளவே முடியாத, நிராகரிப்பை, அவர்களுக்கு சமூகமிழைக்கும் கொடூரங்களை அடையாளம் காட்டும் பலமிகுந்த எழுத்துரு.  சராசரியாக  தொடங்கப்படும் வாழ்வின் வலிமிகுவான பயணம் திரும்பவும் மீண்டு வரவற்ற பாதையில் தள்ளப்பட்டு தனக்கென்ற ஒரு உலகம் தேடி அலைகின்ற சில ஜீவன்களின் ஒட்டுமொத்த கதறல் முழுக்க முழுக்க உள்ளில் எதிரொலிக்காமலில்லை. திருநங்கைகளின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பாராமுகங்களாய் முளைக்கக் காரணமான   சகமனிதர்களின் அசட்டையும் கேலியும் தொடர்ந்து தரப்படுகின்ற துயரங்களும், அவலநிலைகளும் அவர்களை ஒன்றுமற்றதாக்கி விடுவதன் நெரிசல் நாவல் முழுக்க பயணிக்கிறது. திகிலடையச் செய்யும் வேதனைகளை  எதிர்கொள்ளும் வாழ்வாகிவிடும் திருங்கைகளை மனமுவந்து மதிக்கக் கற்றுக்கொள்ளும் தன்மையை வளர்க்க சிறந்த அறிமுகம் ’அவன் - அது= அவள்’ நாவல்.


சமூகத்தில் திருநங்கைகளை ஒரு விசித்திர படைப்பைப்போன்று கண்காணிப்பதும் பரிகசிப்பதும் இன்னும் நடந்து கொண்டிருந்தாலும் சொற்பமாக ஆங்காங்கே அந்நிலை மாறிக்கொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரியதே. பாலியல் வன்முறைக்கு பெரிதும் பாதிக்கப்படுகின்ற  திருநங்கைகள் யாரிடம் முறையிடுவதென்று நினைத்து  பேதலிக்கின்றனர். காவலர்கள் அவர்களிடத்தில் நடந்துகொள்ளும் கருணையின்மை. அங்கீகாரமற்ற பிறவிகளாய் தங்களை நடத்துவதில் வேதனையுற்று தாங்கள் யாருமற்றவர்களாய் கருதுகின்றனர். பல மோசடிகளை செய்து அரசியல்வாதி வழக்குகளை வெகு சாதுர்யமாக தப்பிப்பதும்,  சாமியார்களைக் கொண்டாடி   நடிகர்களுக்கு அபிஷேகமிடும் அல்லது தன்னை சிரமப்படுத்திகொள்ளும் சமூகம், எந்த தவறுமிழைக்காத திருநங்கைகளை அவமதிப்பது வருத்தற்குரியது.  தொடர்ந்து கொண்டிருக்கும்   உரிமைகோரல் சற்று ஆசுவாசமளித்தாலும் முற்றிலுமாய் நிபந்தனகளற்ற சுதந்திரமும்  சக மரியாதையும் அவர்களுக்கு கிடைக்கவேண்டி மனம் பதைக்கிறது. வேலை வாய்ப்புகளை கொடுக்க நிறுவனங்கள் முன் வந்தால் அவர்களது திறமை   மேலோங்கும். எத்தனையோ  கனவுகளை சுமந்து வாழ நினைப்பவர்களுக்கு  அவர்களது நிஜம் பெரும் ரணங்களாகிறது,

எனது மகளுடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்குபோது இருக்கை கிடைக்காமல் நின்றுகொண்டிருக்கையில், அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் திருங்கை. என்னிடம் குழந்தையை கேட்கத் தயங்கி நானாகவே தருவேனா என்று  என்னையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தாள் . குழந்தையைப் பார்த்து சிரிக்க, அவளும் பதிலுக்கு சிரித்தாள். இரு கரம் நீட்டி அவளை அழைத்தாள் .நான் குழந்தையை கொடுத்ததும் மகிழ்ச்சியில் இருவரும் பேசிக்கொண்டே வந்தனர். தன் பெயர் சுஜி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நிறுத்தத்தில் இறங்கும்போது குழந்தைக்கு  முத்தம் தந்து கலங்கி பிரிந்தாள். வாழ்வில் பெரிதாய் விசேஷங்களோ சுவாரஸ்யங்களோ அற்ற அந்த ஒரு நாள் சுஜியால் நினைவில் நிற்கின்றது. 


இந்நாவலில்  கோபி என்றழைக்கப்படும் சிறுவன் காலப்போக்கின் தன் நிலை உணர, சகோதரியின் உடைகளை அணிந்து கொண்டு தன்னை ரசிக்கத் தொடங்கி, தான் ஒரு பெண் என்பதை சகோதரியிடம் தெரிவிக்கவும் செய்கிறான். நம்ப மறுக்கின்ற குடும்பம் அதை வேறுவிதமாக பூசாரியைக் கொண்டு கையாளுகிறது. மனமொடிந்த கோபி தொடர்ந்து தனக்கு ஆறுதல் தரும் நண்பர்களை நாடுகிறான் . கல்லூரி காலங்களிலும் அவனை பரிகசிக்கும் மாணவர்கள் பரிகாசங்களையும் எதிர்க்கிறான்.‘ஆமாண்டா  நா  ஒன்பதுதான் உனக்கு என்னை மாதிரி ஒரு குழந்தை பிறந்தா தெரியும்டா’   என அவர்களை விரட்டுகிறான்.பிறகொரு தருணம் கூவாகம் செல்கிறான். அங்கு அவன் படும் அதிர்ச்சி, துயரம் கண்களில் நீரை வரவைக்கின்றது. 

பிறர்க்குதவும் நோக்கமும் தாய்மனமும் கொண்ட மற்றொரு திருநங்கையான தனத்தின் அனுசரிப்பில் அவன் கோமதியாகமுற்றிலுமாய் மாறிவிடுகிறான். தான் ஒரு முழுபெண்ணாகியதும் அந்த பெண்மையை காப்பாற்றிக்கொள்ள முனைவதும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு நடக்கும் அவதூறுகளும் வேதனைகளும்  நீள்கிறது. காதல் திருமணம் செய்ய அபிப்ராயப்படுகின்ற கோமதி, தனத்தையும் எதிர்த்து திருமணம் செய்கிறாள். கணவரது நடவடிக்கைகள் திருமணவாழ்க்கையையும் தோல்வியாக்குகிறது   கோமதிக்கு.

'' நடந்ததை மறந்திடு.. நம்ம வாழ்க்கை இதைவிடவும் மோசமானதெல்லாம் இனிமேதான் சந்திக்க போகுது ‘’ என்று தனம் கோமதியிடம் கூறும்போது தனத்தின் அனுபவமும் அதில் துவண்ட அவளது வாழ்க்கைச்சூழலை உணர்த்துகிறது.
அவளை இச்சமூகம்   தோற்றுப்போவதற்கானவர்கள் என்ற தடுமாற்றத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது.

 காதல் திருமணத்திற்கு பின் தனது தோழி சுசீலாவை சந்திக்கும்போது தன் வாழ்வில் கணவரால் பட்ட துன்புறுத்தல்களை  விவரிக்கும்போதும், ‘சந்தேகப்பட்டு உன்னை அடிக்கிறான் உனக்கு கோவமே வரலையா   பேசாம அவனை விட்டு நீ வந்து விடவேண்டியதுதானே’  என்ற சுசீலாவிடம், ‘இதுல கோவப்பட என்ன இருக்கு. என்னை ஒரு பொண்ணா நெனச்சி சந்தேகப்படுறது   சந்தோஷப்படத்தான் வைக்கிது ’  தன் பிறப்புக்கு கிடைக்கப்பெறுகின்ற மரியாதை மாறுபட்டதாக இருப்பினும் அதை ஏற்றுக்கொண்டு போராடத் தயாராகும் மனநிலை  திருநங்கைளின் மீதுண்டான மதிப்பை கூட்டுகிறது.  


ஆரம்பம்   பக்கங்களை கடக்க கடக்க ஏதோ ஒரு இருமை மனமுழுக்க கவ்விக்கொள்கிறது. தெருக்களிலும் பஸ்நிலையங்களிலுமாங்காங்கே அவர்களைக் கண்டிருக்கிறேன். நான் கண்டவரை தங்களை அலங்கரித்துக்கொள்வது தன்னை கவனிக்க விருப்பம் கொண்டே உரக்க உரையாடி கொள்வதும் இயல்புள்ளவர்களாக காட்டியிருந்தது. சக தோழிகளாக எண்ணும் மனநிலை என்றைக்கும் மாறியதில்லையென்றாலும், நாவலின் நோக்கமும் அதன் வழி அத்தனை திருநங்கைளின் வாழ்வை கண்முன்னிருத்தி கலங்கச் செய்கிறது.

 எத்தனை நாகரீகங்கள் வளர்ந்தும் கல்வி பெருத்தும் அறிவுக்கு புலப்படாத இந்த அவலம் குறைய இன்னும் இதுபோன்ற புத்தகங்கள் எத்தனை எழுதப்படவேண்டுமோ. திருநங்கைகள் எல்லாவிதத்திலும் தங்களை தாழ்த்திக்கொண்டு ஒருவருக்கொருவர் சொந்தமாக்கி வாழ பழக்கப்படுத்தி கொள்வதன் வேதனையை உணர முடிகிறது. மனம் இறுக்கப்படுகின்ற நெகிழ்வான நாவல். வெகு எதார்த்தமாக தனம் மனத்தில் பதிகிறாள்.  மிக இயல்பாக  விளங்கச்செய்யும் சீரான எழுத்து பாலபாரதியுடையது.இந்த படைப்பு ஏற்படுத்தும் ஆரோக்கியமான மாற்றம் உறுதியானது. இந்நாவலை தமிழில் கிடைக்கப்பெறாமல் மலையாளத்தில் வாசிக்கவேண்டியதானது. ஜீவன் கெடாத எளிமையான மலையாள நடையில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் ஷாஃபி செருமாவிலாயி . வெளியிட்டிருப்பவர்கள் DC பதிப்பகத்தார் கோட்டயம், கேரளா.  

Monday, September 17, 2012

தொலைவு




ஏதுமற்ற சமரசங்களில்
தொலையாத நிராசைகள்
ரகசியமாய் பதுங்கியது
சுவாசத்தினூடாய்
விலகும்  வழியற்று
சமநிலைகள்
தள்ளி சென்ற 
நீர்க்குமிழிகள்
உடையாது ஒன்றை ஒன்று  புணர்ந்து
கொண்டு  காற்றை
சிதறடித்த  .
சந்தர்ப்பங்களை
மறந்திருந்த  புன்னகைகள்
துயரங்களின் தழும்புகளால்
கீறப்பட்டப்பட்ட பற்களில்
மெல்ல தன்னை குறுக்கி
தேம்பிகொள்கிறது.
விட்டகலாத ஒற்றை முத்தம்கூட
காலத்தை  கடத்தி செல்லும் முள்ளாகும் 





Tuesday, September 11, 2012

துயிலுற்ற மௌனம்





துழாவிக்களைத்த  நீர் அலைகள்
அமைதியிழந்து  தழைக்கிறது
அத்துமீறி என்  தோட்டத்து வேரில்
இழைய தொடரும் காலமெனினும்
துரதிர்ஷ்ட சொல்லொன்றுக்கு கீழ்
முளைத்து நெளிந்த  பாம்பின் கால்கள்..
அனுமதிக்கப்பட்ட பரமபதத்தை 

வழிமறித்து. தனித்து நிற்கிறது
சுருக்கமற்ற நமது பிரியங்கள்
யாருமற்றதாய் புலம்பும் இன்மைகள்
பேரளவானதொரு தூரத்தை 

நெருங்குகிறது
அண்மையில்   இருப்பதறியாது









Wednesday, August 24, 2011

புரிதல்.




பெருதற்கரிய வார்த்தைகளை
வார்த்திருந்த உனது
நாவு தடித்திருக்கிறது
சொற்களினிடையே
விடுபட்ட எழுத்துக்கள்
வேறு வார்த்தைக்குள்
அடைபட்டுச்சொல்லி
முடித்ததின்
பொருளுக்கு அயலாகி
அர்த்தமற்றுப்போன கவிதை
நிலம் பூந்தாது
வெளிமிதக்கும் நிழல் போல
இருள் புலர காத்திருக்கும்.
ஒவ்வொரு கண்களுக்காயும்.




Wednesday, August 10, 2011

இருட்டு முத்தம்




சாமங்களில் அவ்வப்போது
எனது அறையில்
உலவத் தொடங்கியிருக்கின்றது

ஒரு அணிலின் சத்தம்
அதற்கு நீளம் குறைந்திருக்கின்றது
உதடுகளை தின்றபடியே
ஏதேதோ பிதற்றியது
அசதியில் தூங்கி விட்டேன்
அல்லது மயக்கத்திலுமாகலாம்
விடியல் பொழுதில்
படுக்கையெங்கும் கோடுகள்
நிசப்தமாய் பூத்திருந்தது
நீ தந்துவிட்டுப்போன
முற்றத்து மல்லிகை

Tuesday, August 9, 2011

சிதறல்


.



பறக்கவோ பற்றவோ
தோதில்லமல்
பக்கங்களின் அலைக்கழிப்பில்
தானும் உதிர்க்கின்றது
எழுத்துக்களை
வெளியெங்கும் மழை
பச்சை
ஊதா
கருநீலம்
மயிலெங்கும் காடு.