Saturday, December 18, 2010

லில்லினாவுக்காக...

எனது கிராமத்தின் வேர்கள் எனக்குள்ளிருக்கின்றதென
அவள் கூறினாள்.
ஆனால் நான்,

ஏழாவது மாடியில் குடியிருக்கின்றேன்.
வேர்கள் இப்பொழுது ஜன்னலை பற்றி
சட்டி செடியாய் வளர்கிறது.
பழைய குணங்கள் ஒவ்வொன்றாய்
ஒவ்வொரு வசந்தத்திலும்
பூக்களாகிறது.
கண்களின் கருணைகொண்டு
அதீத அழகுபெற்றிருக்கின்றது.
அவையின் சுருண்ட வேர்கள்
நம்மை நோக்கி நீளுகிறது.
அவற்றிலிருந்து வித்தியாசப்படுகின்ற நமது தர்ம சங்கீதங்கள்.
என்னவென்றறியாத ஏதென்றறியாத
ஒரு அந்நிய நாட்டிலிருந்து அப்பா வந்தார்.
குடும்பத்தின் சாயல் அவரில் இழந்துகொண்டிருந்தது.
பரிணாமங்களில் எப்போதுமே ஒரு பிளவுண்டு.
காதலில் பொறாமைப்பட எந்த உரிமையும் எனது நண்பன் தந்திருக்கவில்லை.
குளத்துமீனுக்கு சாப்பாடு மேசையின் மீது இருக்க ஆசை.
முட்டைக்கு யாராவது தன்னை தின்னவேண்டுமென்ற மோகம்.
விரியத் துடிக்கும்
கனவுகளின் அந்தரங்கம் பிளந்த நிசப்தம்.
இறைச்சி துண்டுகளாய் தரையில் நெளிந்து விழும்.
சாமான்கள் சங்கமித்து நிற்கின்றன
பச்சைவிளக்குபார்த்து.
இரவுகளின்
கொடுக்கலும் வாங்கலும் தீர்த்திருந்தது.
இரட்டையர்கள் ஒற்றைகளாய் பிரிந்திருக்கின்றது.
விரகங்களின் பாதையில் தொடர் வண்டிக்கு கீழ்
நசுங்கியிருந்தது
உறங்க முடியாத நிலை தளர்ந்துபோன தெருவீதி
தூக்க மாத்திரை தேடுகிறது.
'தயவு செஞ்சி அழாதே ' அவன் கூறுகிறான்
எனது கிராமத்தில் ஒரு சொல்லிருக்கின்றது
கொஞ்சம் மூத்திரம் சிதற ஆண்களுக்கு
எப்போதும் முடியும்.

மலையாள மூலம் - அய்யப்ப பணிக்கர்
தமிழில் - யாழினி