Wednesday, June 30, 2010

குமிழ்ச்சரங்கள்


குரல்வளை அறுத்து
கசியத்தொடங்கியிருந்த
வலியென்பதன்
பெயர் உயிர்
கனன்ற துயரறியாத
திரிதலில் பொதிந்திருந்த
கழிப்பறைக்குள்
கண்ணீரின்
சேகரிப்பும்
சில துளிகளின்
சுத்தீகரிப்பும்
விதைகளற்ற
வெளியெங்கும்
வெள்ளம் பாய்ந்திருக்க
நாகுழறிய
மண்
மண்ணல்ல
மரமோ
செடியோ
முள்ளோ
முடிவில்லாது.

நான் வித்யா - என் பார்வையில்


கோவை செம்மொழி மாநாடு புத்தகக்கண்காட்சியில் லிவிங் ஸ்மைல் வித்யாவின், ”நான் வித்யா" கிடைக்கப்பெற்றேன். படிக்கத்தொடங்கிய முதல் பகுதியே என்னை வாரி சுருட்டிப்போட்டது. சரளமான வாழ்விற்கான ஓயாத வேட்கை மட்டும் புலப்படுகின்றது. .சமூகத்தோடு எதிர்கொண்டிருந்த இரக்கமற்ற பரிகாசங்களின் இறுக்கம் தன்னை எவ்விதம் கலங்கடித்திருக்கின்றது என்பதை தத்ரூபமாக விளங்கச் செய்திருக்கின்றார் வித்யா.

சரவணனுக்குள் பதுக்கி இருந்த வித்யாவை மீட்டெடுக்க பட்டபாட்டின் தடயங்களை கையுருக்கி பகிர்ந்த விவரணையின் விதம் துயரின் குரூரம். மூன்றாம் பாலினத்தை பற்றி முற்றிலுமாய் அறிந்து கொள்ளவிழைந்த ஆர்வம்தான் இப்புத்தகத்தை வாங்கத் தூண்டியதென்றாலும் முடிவில் ஒரு குற்றவாளியென உணர்கிறேன். அழகான அம்முகம். எத்தனை வலிகளைக் கொண்டு வடிவாகி இருக்கின்றது. மாற்றங்களுக்கான தேவையும் தீவிரமும் நிறைந்த பெண்.

அசாதாரண அலங்காரங்களோடு அலட்சியமாய் வலம் வரும் அவர்களுக்கு பெண் உடமைகளோடு இருப்பது மோகமல்ல, அவ்வுணர்வுகளை புரியவைப்பதன் அவசரம்... உரிமை.. அப்படித்தானிருக்கவேண்டும்.



'நான் சரவணனில்லையே தவிர மனிதப்பிறவிதான் பூதமில்ல பிசாசல்ல என் புத்தி என்னை காக்கும்'



தன்னம்பிக்கையின் சாரமிது. பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் பிணைந்து வளையும் காலம் எத்துணை அவதூறுகளை அள்ளித் தூவுகிறது. ஆழங்காணாத, பாதை கணிக்காத திசையெங்கும் பாறி*த்திரியும் அந்நெஞ்சங்களுக்கு வாழ்வுக்கான எந்த சந்தர்ப்பங்களையும் வழங்க மறுக்கும் இச்சமூகத்தின் இத்தனை பெரிய ஊனத்தை எந்த உலையில் இடுவது. புறக்கணிப்பின் ஓலங்கள் நிறைந்த அறைகளுக்குள் அடங்கியும் அடங்காமலும் வட்டமிடும் அச்சிறகுகளை வெட்டி முறிக்கவோ, காற்றுகளை அவ்வறைகளுக்குள் இல்லாமலாக்கவோ என்ன உரிமை இருக்கின்றது. வருணிக்கவியலா வலியில் சரவணன் பெற்றெடுத்த வித்யா திருநங்கைகளின் பொக்கிஷம்.

பரிகாசம் பட்டவிழ்கின்ற நீர் கோர்வைகளின் நீளம் நிறுத்தவாகினும் குறைக்கவாகினும் என்ன செய்ய..?

கூர் கூராகி சிதறிய காயம் மெல்ல மெல்ல வடுவாகிய வேளையில் வெளிப்பட்டிருக்கும் இப்பகிர்வு நம் நெஞ்சத்தின் தீரா காயமாக கண்ணிக் கிடக்கின்றது. எத்தனையோ திருநங்கைகளின் கண்ணீரில் ஒற்றைத்துளி வெளிச்சம் வித்யா. இனி அவ்வெளிச்சம் குறைவதில்லை என்னபதுதான் பலம்.

மனித நேயத்தின் சாயல் முறிந்த மரணத்தின் நுனிக்காம்பில் தொங்கியபடி வாழ, கையேந்தும் ஜீவன்கள் செய்திருந்த குற்றமென்ன? இடுக்குகளில் தனக்கென்று உருவாக்கிய உறவுகளோடு சுகமென்பதாய் சிரித்தும் அழுதும் களைக்கும் அவர்கள் ஒடுக்கிப் போடும்படி எந்த தேசத்துக்குத் துரோகம் இழைத்தனர்?

மனிதமற்ற ஒவ்வொரு ஜீவனும் மனிதனுக்கு ஒப்பற்றதல்ல. வீடுகளின் அத்தனை துவாரங்களையும் அடைத்து "நிஜம்"-ங்களுக்கு உச்சுக்கொட்டி உறக்கமிருக்கும் அறைகளில் தன்னைப் போர்த்திக் கொள்ளுபவர்களிடத்தில்தான் தொலைந்து கிடக்கின்றது வழியற்றவர்களின் உறக்கமும்.

சரியான அங்கீகாரமோ ஓதுக்கீடோ திருநங்கைகளின் அன்றாடத்தை மட்டும்தான் நிரப்பும், இச்சமூகத்தின் ஒட்டுமொத்த புறக்கணிப்பும் சிநேகத்தின் கையசைவுகளாய் மாறும் பட்சத்தில் அல்லாது ஒரு விடியலில்லை.

இயற்கையின் வித்தகத்திற்கு யாரும் யாரையும் தண்டிக்க வலுவற்றவர்களே. உடைந்த நெஞ்சங்களின் ஒன்றுபட்ட உருவமாய் உயிர்த்திருக்கும் வித்யாவைப்போல இனியொரு பகிர்வுக்கு வழிவகுக்கலாகாது.
முற்று செய்ய என்ன செய்யப்போகிறோம்?

பிரபஞ்சத்தில் வாழத்தகுதியற்றவர்களாய் யாருமில்லை. அன்பின் வெளியியல்தான் வாழ்வுக்கான நியதி.


வித்யாவின் இந்தப் புத்தகம் இச்சமூகத்தை சற்றேனும் புரட்டிப்போடும் கூர் ஆயுதம். இத்தரிசனமுணர்ந்தவர்களின் மனத்தில் சற்றேனும் ஈரமிருக்கும். பரிதாபங்கள் தீர்வாகாது. முன்வருகை சரிசமமான பயணம் மட்டும்தான் அவ்வாழ்க்கைக்குச் சீர். இச்சமூகத்தின் கீழ்மையை உயர்த்த, சரிக்கட்ட யாரோவல்ல... நாமே முயற்சிக்க வேண்டும். வெளிச்சத்தின் ஒற்றை கீற்றாய் தியானித்திருக்கும் வித்யாவின் இப்படைப்பு இதயத்தின் சுவாச சுருக்கங்களை இறைக்கச்செய்கின்றது.

***
*பாறி - மலையாள சொல். இதற்கிணையான தமிழ்ச்சொல் தெரியவில்லை. காற்றில் பறக்கும் தூசி போல அல்லது காற்றின் திசையில் மிதக்கும் இறகு போல சொல்ல நினைத்தது.

Saturday, June 19, 2010

சாரங்களின் நிசப்தம்

ஒற்றைபட்டு சாய்ந்த
நிழலின் நிலமெங்கும்
இருட்டுக்குமொப்பாத
சாம்பல் நிற
மண்ணினாலான பூமி
கவிழ்ந்திருந்த முகத்தை
கிளைத்து
பசிக்கு துழாவி
கொத்தத்தொடங்குகிறது சேவல்
அரூபங்களின் துயர் தீராபொழுதில்
சொற்ப வார்த்தைகளை
கொண்டொரு பிரயாணங்களின்
மீந்து நின்ற கவிதைகளில்
சில பரிவில்லாது
தொண்டைக்குள் அடைபடுகிறது
சுவடுகளை அழித்திருந்த காற்றுதான்
என்னையும் இல்லாதாக்குகிறது.
அணைத்த மெழுகின்
அவஸ்தை விளம்பித்திரிகையில்தான்
அறிந்திருந்தது அதனின் ரூபமும்