Friday, March 26, 2010

பெயர்க்கவற்ற அகண்டவெளி

துயர்க்கூடி
முதிர்ந்திருந்த
இரவின் வேர்த்தேடி
பயணித்திருந்த இலைகள்;
துழாவி தூர்க்கவியலாது
நிலமெங்கும் வியாபித்திருந்த
நரம்புகளைக்கொண்டு
சிவப்பாலும்
பச்சையாலும்
சுயாதீனமாய்
உயிர்க்கவற்ற விளக்குகளில்
சுருண்டுடையவிருக்கும்
ஒளிக்கு வண்ணமீட்டுகிறது.
வேறொருவருக்கும் உதவாத
வெற்று வெளிச்சங்களின்
அசூயைக்கொண்டு
கருகிய இலைகள்
வெகுநேரம் கூவியும்
வெளிவராத
வீட்டுடைமைகளை
சலித்த யாசகனாய்
வஞ்சனைகளின் பிரதிபலிப்புகளில்
தன்னை இறுக்கி
இலை சேர்த்துக்கொண்டிருக்கின்றது
மரம்.

Monday, March 22, 2010

வெளிப்படுகை

தயையற்ற நரம்புகளில்
பயணப்படத் தொடங்கியது
விழுந்து வேர்கொண்டெழுந்த மழை;
அமைதியற்ற நிலையில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிந்தியவை
கவியும் மௌனவெளியில்
உடலிழந்த நிர்வாணத்தில்
மடிப்பு கலையாத ஆடையாகி
அந்தப் பொழுதின் அந்திமத்திற்காய்
காத்துக்கிடக்கையில்
கருவுற்றிருந்தேன்
புடைத்த வயிறு தடவுகையில்
விரல்களில் ஒட்டிக்கொண்ட
துளிகளில் சில
வசீகரம் நிறைந்த
பின்னிரவுகளின்
பூரணம் நிலவாகிக் கொண்டிருப்பதை
குறைகூறி
விழுங்கிய காமத்தை
உமிழச்சொன்னது
மார்புகளில் ஒற்றிக்கொண்டிருக்கும்
வெள்ளைக்குருதி சட்டென
மூத்திரமாய்
ஒற்றை துளி வடிய
சாதுர்யமாய்
உறைந்துவிட்ட உயிரொன்று
அன்னியப்பட்டு
கரை ஒதுங்குகிறது.

============

(இம்மாத அகநாழிகையில் எனது கவிதையைப் பிரசுரித்த ஆசிரியர் குழுவினருக்கு நன்றிகள்.)