Monday, September 20, 2010

சஞ்சாரம்

பிரக்ஞைகளை கூடுகட்டி
பெருத்திருந்த
வயிற்றின் தாரைகள்
குறுக்கும் நெடுக்கும்
பலதுமாய்
சுருங்கிக்கிடக்கிறது
மௌனத்தின் மெய்கள்
பதப்படுத்திய
உராய்வுகளின் வெளிச்சம்
பலமாய் பலவீனமாய்
பிறந்து கொண்டிருக்கின்றது
அறை முழுவதும்
அடக்கவியலாத
ஆளுமைகளைக் கொண்டே
ஒவ்வொரு முறையும்
கருத்தரித்து விடுகிறேன்
இம்முறையும்

Thursday, July 8, 2010

நளினி ஜமீலா - புத்தக விமர்சனம்


திக்கற்றவர்களாய் திரிகின்ற பாலியல் தொழிலாளர் கனவுகளின் கரியபாகத்தின் வெளிச்சம்தான் திருமதி நளினி ஜமீலாவின் சுயசரிதை. உணரவியலா உள்வலிகள் ஒன்றுகூடிய வலிமையென தன்னை நிலைப்படுத்தி கொண்டிருக்கும் நளினியின் இப்புத்தகத்தை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப் அவர்களுக்கு நன்றி.

விழியகற்றவியலா ஓயாத ஏமாற்றங்கள் கண் தூவிச்சென்ற உறுத்தலின் கலங்கலில்தான் பாலியல் தொழிலாளர்களின் காலங்கள். எதிர்பார்ப்புகளற்ற வடிவம் வாழ்வாகாது. ஆனால் அவைகள்தாம் அழகையும் அலங்கோலத்தையும் இட்டு நிரப்புகிறது. உள்ளுக்குள் உருண்டு சரியும் அவ்வெதிர்பார்ப்புகள் நுரைகளிளிருந்து தட்டி விழுங்கிய ஒற்றை உருளை மெல்லிய வலியோ வலியொத்த அவஸ்தையோ கொல்லன் துணிந்திருந்த வாழ்க்கையின் தேவையாகப்படுகின்றது.

ஒழுக்கமென்பதன் அரிதாரங்களைப்பூசி தொண்டைக்கிழிய பிரசங்கிக்கும் ஒட்டு மொத்த திரைகளையும் விலக்கி போட்டிருக்கும் பகிர்வு. எனக்குத் தெரிந்து 'அழகிகள் கைது' , 'கையும் களவுமாகப் பிடிபட்டனர்' பத்திரிகைகளில் படித்த ஞாபகம். பிற்பாடு காலங்களில் அச்செய்தியை படிக்காதிருந்தது என் ஒழுக்கத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

பாலியல் தொழிலுக்கென திட்டமிட்டு தன்னைத் தயார்ப்படுத்தி வந்திருந்தவர்களென்று யாருமிருக்கமாட்டார்கள். தன்னைச் சுற்றி பிரதிபலிக்கும் கருணையற்ற இல்லாமைகளின் உக்கிரம் தருகின்ற உபத்திரவங்களை குறைத்துக்கொள்ள சமூகம் கொடுக்கும் அல்லது சமூகத்துக்கு கொடுக்கும் கண்ணீரே இத்தொழில். காமத்தணிவு.



"கூலியைச் சொல்லி நான் ஒருபோதும் பேரம் பேசியதில்லை. கேட்ட தொகைக்கு ஒப்புகொள்வதுதான் வழக்கம். மகளை வளர்த்துவதற்கு மாமியார் கேட்ட ஐந்து ரூபாயை அப்படியே ஒப்புக்கொண்டதால்தான் நான் இந்த தொழிலுக்கு வந்தேன் "


தேவைகளுக்கு தட்ட தடையற்ற வீடுகளில் நிரம்பிக்கிடக்கும் காமத்தின் ஆளுமைகள் ஒழுக்கத்தின் பின்னறைகளில் தலைமறைத்து கொண்டிருக்கின்றது. பணத்தை பின்புலமாக்கிக் கொண்டு பருத்திருந்த ஆண்மையின் ரகசியங்கள் ஊற்றி நிரப்பும் கழிவறைகளாகவே கருதப்படுகின்றனர் பாலியல் தொழிலாளர்கள்.

எந்த உறவுகளுக்காக தன் நிஜத்தை மாய்க்கத் தொடங்குகிறார்களோ அவ்வுறவுகளின் தலைமுழுகலில்தான் தடுமாறி களைக்கின்றனர். யாராலும் தீண்டப்படாது ஓடியும் ஒளிந்துமாய் துயரங்களின் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவ்வுடல்களின் குடி கொண்டு ஊனப்பட்ட உணர்வுகளின் சாயல் வெளிப்பட்டு தோள் சாய்தலுக்கு ஏங்குகின்றனர்.

மர்மமான முறையில் நளினியின் சகப்பாடி அம்முவின் மரண சோகம் படிப்பவர்களையும் கவ்விக்கொள்கிறது.

தற்கொலை என முடிவாக்கி மூடிவிட்டது. எல்லாவித ஆதாரமிருந்தும் ஊகங்கள் சரியாக இருக்கும் பட்சத்திலும் அக்கொலை தற்கொலையாகவே தற்காத்து கொண்டது. எத்துணை குடும்பங்களின் ஆசுவாசமாக வாழுமவர்களை தன் மகளென்றோ சகோதரி என்றோ சொல்லிக்கொள்ள முனைவதே இல்லை. காலக்கடைசியில் அநாதைகளென அடையாளப்பட்டு அடங்கிவிட்டிருக்கும் அவ்வுயிர்.



”குழந்தைகளை வளர்ப்பதற்காக நான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். எல்லா தொழில்களையும் போல் இதிலும் சலிப்பு தட்டிய பிறகும்கூட இதில் ஈடுபட்டதும் குழந்தைகளை நினைத்துதான் இப்போது அந்த பொறுப்பும் இல்லாமலாகி விட்டது."


ஒழுக்கவாதிகளின், காவல்துறையினரின் துன்புறுத்தலின் வேண்டுமென்ற துச்சமும் பரிகசிப்பும் வெடித்துப்போன வாழ்வின் மிகப்பெரிய பிளவை மேலும் விரிசலாக்குகிறது. தற்பொழுது உடைந்திருக்கும் ஒவ்வொரு விலங்கின் கண்ணியிலும் துயரின், தனிமையின் தழும்பிருக்கும். எல்லாவற்றிலிருந்தும் வெளியேறவியலாது கட்டுண்ட பிறகு அவ்வாழ்க்கைக்கு சரியான அங்கீகார சொற்ப்பொழிவுகளுக்கு தன்னைத் தயார்படுத்தி பெருமொரு கூடமாய் வலுத்து நிற்கின்றது. அக்கூட்டத்தின் தலைவியாய் இன்று நின்றிருக்கும் அப்பெண்மணி நளினி ஜமீலா கம்பீரம்.

பெருமொரு நீர்க்குவியலுக்கு மத்தியில் பெருத்திருக்கும் பாறையின் உறைவும், வழிநெடுக தடம் தேடியலையும் கூழாங்கற்களின் ஏக்கமும் நின்றுவிடத்தானே. முதலீடாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் பாலியல் தோழிகளின் எதிர்பார்ப்புகள் ஈடேறவும் அதற்கான பிரயாணத்தில் நளினியின் எண்ணம் வலுப்பெற சமூகம் வழிதர வேண்டும்.

அந்தந்த நாட்களின் பின் அவசியப்பட்டிராத நாள்காட்டி துண்டு காகிதங்கள் போல வீசி எறிகின்ற அவர்களின் கோஷங்கள் சீர்படுத்திவிட வேண்டும். அக்கோஷங்களின் தொலைவு குறைக்க ஆவண செய்தல் வேண்டும்.

குற்றமென்று விரட்டப்படுகின்ற இப்பெண்களின் சரிபாதி வந்திணங்கும் ஆடவருக்கும்தானே. முற்றுப்பெறவியலாத இத்தேவையின் ஒழுங்கீனம் ஒழுங்காக்கப்படவேண்டும். பாலியல் தொழிலாளியென சொல்லிக்கொள்ளும் உரிமம் தரப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளும் நளினியின் கூற்றுகளின் குறைபாடேதும் இருப்பதாய் தெரியவில்லை.

கைவிடப்பட்டோ அல்லது கைவிலக்கபட்டோ தடுமாறி உடம்புகளை வாடகையாக்கிக் கொண்டிருக்கும் அவ்விரவு மெர்க்குரிப்பூக்களை தீயிட்டு பொசுக்கி கலாச்சார குளிர்காய அவசியப்படாதிருந்தால் போதுமானது.

மேலும் இப்புத்தகம் பற்றிய மற்ற சில விமர்சனங்கள்...

1.பாதித்தது
2.என் பெயர் நளினி ஜமீலா
3.நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்

Wednesday, July 7, 2010

மூன்று கவிதைகள்

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

********

துயரங்களும் துயில்தல்களும்
ஆழத்தளும்பிய நீரில் நீந்துகிறது.
பற்றாக்குறையின் பிரதிபலிப்புகளில்
தன்னைப் பார்த்திருந்த
பரிதி
சடங்குப்பெண்ணின்
சாயலைக்கொண்டு
மூழ்கவெண்ணுகிறது.

********

காத்திருக்கக் கற்றுக்கொண்ட
காலச்சிறைக்குள்
எந்த அற்றத்திலிருந்தோ
நீண்டு வந்த வேரின்
கிளைகளில் முடிந்திருக்கிறேன்
கனவுகளை
அவ்வண்ணமாகவே..

Wednesday, June 30, 2010

குமிழ்ச்சரங்கள்


குரல்வளை அறுத்து
கசியத்தொடங்கியிருந்த
வலியென்பதன்
பெயர் உயிர்
கனன்ற துயரறியாத
திரிதலில் பொதிந்திருந்த
கழிப்பறைக்குள்
கண்ணீரின்
சேகரிப்பும்
சில துளிகளின்
சுத்தீகரிப்பும்
விதைகளற்ற
வெளியெங்கும்
வெள்ளம் பாய்ந்திருக்க
நாகுழறிய
மண்
மண்ணல்ல
மரமோ
செடியோ
முள்ளோ
முடிவில்லாது.

நான் வித்யா - என் பார்வையில்


கோவை செம்மொழி மாநாடு புத்தகக்கண்காட்சியில் லிவிங் ஸ்மைல் வித்யாவின், ”நான் வித்யா" கிடைக்கப்பெற்றேன். படிக்கத்தொடங்கிய முதல் பகுதியே என்னை வாரி சுருட்டிப்போட்டது. சரளமான வாழ்விற்கான ஓயாத வேட்கை மட்டும் புலப்படுகின்றது. .சமூகத்தோடு எதிர்கொண்டிருந்த இரக்கமற்ற பரிகாசங்களின் இறுக்கம் தன்னை எவ்விதம் கலங்கடித்திருக்கின்றது என்பதை தத்ரூபமாக விளங்கச் செய்திருக்கின்றார் வித்யா.

சரவணனுக்குள் பதுக்கி இருந்த வித்யாவை மீட்டெடுக்க பட்டபாட்டின் தடயங்களை கையுருக்கி பகிர்ந்த விவரணையின் விதம் துயரின் குரூரம். மூன்றாம் பாலினத்தை பற்றி முற்றிலுமாய் அறிந்து கொள்ளவிழைந்த ஆர்வம்தான் இப்புத்தகத்தை வாங்கத் தூண்டியதென்றாலும் முடிவில் ஒரு குற்றவாளியென உணர்கிறேன். அழகான அம்முகம். எத்தனை வலிகளைக் கொண்டு வடிவாகி இருக்கின்றது. மாற்றங்களுக்கான தேவையும் தீவிரமும் நிறைந்த பெண்.

அசாதாரண அலங்காரங்களோடு அலட்சியமாய் வலம் வரும் அவர்களுக்கு பெண் உடமைகளோடு இருப்பது மோகமல்ல, அவ்வுணர்வுகளை புரியவைப்பதன் அவசரம்... உரிமை.. அப்படித்தானிருக்கவேண்டும்.



'நான் சரவணனில்லையே தவிர மனிதப்பிறவிதான் பூதமில்ல பிசாசல்ல என் புத்தி என்னை காக்கும்'



தன்னம்பிக்கையின் சாரமிது. பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் பிணைந்து வளையும் காலம் எத்துணை அவதூறுகளை அள்ளித் தூவுகிறது. ஆழங்காணாத, பாதை கணிக்காத திசையெங்கும் பாறி*த்திரியும் அந்நெஞ்சங்களுக்கு வாழ்வுக்கான எந்த சந்தர்ப்பங்களையும் வழங்க மறுக்கும் இச்சமூகத்தின் இத்தனை பெரிய ஊனத்தை எந்த உலையில் இடுவது. புறக்கணிப்பின் ஓலங்கள் நிறைந்த அறைகளுக்குள் அடங்கியும் அடங்காமலும் வட்டமிடும் அச்சிறகுகளை வெட்டி முறிக்கவோ, காற்றுகளை அவ்வறைகளுக்குள் இல்லாமலாக்கவோ என்ன உரிமை இருக்கின்றது. வருணிக்கவியலா வலியில் சரவணன் பெற்றெடுத்த வித்யா திருநங்கைகளின் பொக்கிஷம்.

பரிகாசம் பட்டவிழ்கின்ற நீர் கோர்வைகளின் நீளம் நிறுத்தவாகினும் குறைக்கவாகினும் என்ன செய்ய..?

கூர் கூராகி சிதறிய காயம் மெல்ல மெல்ல வடுவாகிய வேளையில் வெளிப்பட்டிருக்கும் இப்பகிர்வு நம் நெஞ்சத்தின் தீரா காயமாக கண்ணிக் கிடக்கின்றது. எத்தனையோ திருநங்கைகளின் கண்ணீரில் ஒற்றைத்துளி வெளிச்சம் வித்யா. இனி அவ்வெளிச்சம் குறைவதில்லை என்னபதுதான் பலம்.

மனித நேயத்தின் சாயல் முறிந்த மரணத்தின் நுனிக்காம்பில் தொங்கியபடி வாழ, கையேந்தும் ஜீவன்கள் செய்திருந்த குற்றமென்ன? இடுக்குகளில் தனக்கென்று உருவாக்கிய உறவுகளோடு சுகமென்பதாய் சிரித்தும் அழுதும் களைக்கும் அவர்கள் ஒடுக்கிப் போடும்படி எந்த தேசத்துக்குத் துரோகம் இழைத்தனர்?

மனிதமற்ற ஒவ்வொரு ஜீவனும் மனிதனுக்கு ஒப்பற்றதல்ல. வீடுகளின் அத்தனை துவாரங்களையும் அடைத்து "நிஜம்"-ங்களுக்கு உச்சுக்கொட்டி உறக்கமிருக்கும் அறைகளில் தன்னைப் போர்த்திக் கொள்ளுபவர்களிடத்தில்தான் தொலைந்து கிடக்கின்றது வழியற்றவர்களின் உறக்கமும்.

சரியான அங்கீகாரமோ ஓதுக்கீடோ திருநங்கைகளின் அன்றாடத்தை மட்டும்தான் நிரப்பும், இச்சமூகத்தின் ஒட்டுமொத்த புறக்கணிப்பும் சிநேகத்தின் கையசைவுகளாய் மாறும் பட்சத்தில் அல்லாது ஒரு விடியலில்லை.

இயற்கையின் வித்தகத்திற்கு யாரும் யாரையும் தண்டிக்க வலுவற்றவர்களே. உடைந்த நெஞ்சங்களின் ஒன்றுபட்ட உருவமாய் உயிர்த்திருக்கும் வித்யாவைப்போல இனியொரு பகிர்வுக்கு வழிவகுக்கலாகாது.
முற்று செய்ய என்ன செய்யப்போகிறோம்?

பிரபஞ்சத்தில் வாழத்தகுதியற்றவர்களாய் யாருமில்லை. அன்பின் வெளியியல்தான் வாழ்வுக்கான நியதி.


வித்யாவின் இந்தப் புத்தகம் இச்சமூகத்தை சற்றேனும் புரட்டிப்போடும் கூர் ஆயுதம். இத்தரிசனமுணர்ந்தவர்களின் மனத்தில் சற்றேனும் ஈரமிருக்கும். பரிதாபங்கள் தீர்வாகாது. முன்வருகை சரிசமமான பயணம் மட்டும்தான் அவ்வாழ்க்கைக்குச் சீர். இச்சமூகத்தின் கீழ்மையை உயர்த்த, சரிக்கட்ட யாரோவல்ல... நாமே முயற்சிக்க வேண்டும். வெளிச்சத்தின் ஒற்றை கீற்றாய் தியானித்திருக்கும் வித்யாவின் இப்படைப்பு இதயத்தின் சுவாச சுருக்கங்களை இறைக்கச்செய்கின்றது.

***
*பாறி - மலையாள சொல். இதற்கிணையான தமிழ்ச்சொல் தெரியவில்லை. காற்றில் பறக்கும் தூசி போல அல்லது காற்றின் திசையில் மிதக்கும் இறகு போல சொல்ல நினைத்தது.

Saturday, June 19, 2010

சாரங்களின் நிசப்தம்

ஒற்றைபட்டு சாய்ந்த
நிழலின் நிலமெங்கும்
இருட்டுக்குமொப்பாத
சாம்பல் நிற
மண்ணினாலான பூமி
கவிழ்ந்திருந்த முகத்தை
கிளைத்து
பசிக்கு துழாவி
கொத்தத்தொடங்குகிறது சேவல்
அரூபங்களின் துயர் தீராபொழுதில்
சொற்ப வார்த்தைகளை
கொண்டொரு பிரயாணங்களின்
மீந்து நின்ற கவிதைகளில்
சில பரிவில்லாது
தொண்டைக்குள் அடைபடுகிறது
சுவடுகளை அழித்திருந்த காற்றுதான்
என்னையும் இல்லாதாக்குகிறது.
அணைத்த மெழுகின்
அவஸ்தை விளம்பித்திரிகையில்தான்
அறிந்திருந்தது அதனின் ரூபமும்

Sunday, May 23, 2010

நீயற்றதொரு விபத்தாய்


அந்தரத்தில்
பாதை கோர்த்து
பயணித்திருந்த
சிலந்தியின்
கிளைகள்
உந்தி உயர்ந்து
கனவுகளை
ஆழக்கருமைகளாக்கி
தரை இறக்கியது
இலைகள்
இறகுகள்
இதயங்கள்
உறவுகளோடு
உணவு கண்ட
ஈக்களும் மொய்க்கும்
வனமெங்கும் இல்லை மரம்
ஒன்றுமற்ற பொழுதாகினும்
உறுத்துகிறது உன் வருகை.