Thursday, July 8, 2010

நளினி ஜமீலா - புத்தக விமர்சனம்


திக்கற்றவர்களாய் திரிகின்ற பாலியல் தொழிலாளர் கனவுகளின் கரியபாகத்தின் வெளிச்சம்தான் திருமதி நளினி ஜமீலாவின் சுயசரிதை. உணரவியலா உள்வலிகள் ஒன்றுகூடிய வலிமையென தன்னை நிலைப்படுத்தி கொண்டிருக்கும் நளினியின் இப்புத்தகத்தை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப் அவர்களுக்கு நன்றி.

விழியகற்றவியலா ஓயாத ஏமாற்றங்கள் கண் தூவிச்சென்ற உறுத்தலின் கலங்கலில்தான் பாலியல் தொழிலாளர்களின் காலங்கள். எதிர்பார்ப்புகளற்ற வடிவம் வாழ்வாகாது. ஆனால் அவைகள்தாம் அழகையும் அலங்கோலத்தையும் இட்டு நிரப்புகிறது. உள்ளுக்குள் உருண்டு சரியும் அவ்வெதிர்பார்ப்புகள் நுரைகளிளிருந்து தட்டி விழுங்கிய ஒற்றை உருளை மெல்லிய வலியோ வலியொத்த அவஸ்தையோ கொல்லன் துணிந்திருந்த வாழ்க்கையின் தேவையாகப்படுகின்றது.

ஒழுக்கமென்பதன் அரிதாரங்களைப்பூசி தொண்டைக்கிழிய பிரசங்கிக்கும் ஒட்டு மொத்த திரைகளையும் விலக்கி போட்டிருக்கும் பகிர்வு. எனக்குத் தெரிந்து 'அழகிகள் கைது' , 'கையும் களவுமாகப் பிடிபட்டனர்' பத்திரிகைகளில் படித்த ஞாபகம். பிற்பாடு காலங்களில் அச்செய்தியை படிக்காதிருந்தது என் ஒழுக்கத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

பாலியல் தொழிலுக்கென திட்டமிட்டு தன்னைத் தயார்ப்படுத்தி வந்திருந்தவர்களென்று யாருமிருக்கமாட்டார்கள். தன்னைச் சுற்றி பிரதிபலிக்கும் கருணையற்ற இல்லாமைகளின் உக்கிரம் தருகின்ற உபத்திரவங்களை குறைத்துக்கொள்ள சமூகம் கொடுக்கும் அல்லது சமூகத்துக்கு கொடுக்கும் கண்ணீரே இத்தொழில். காமத்தணிவு.



"கூலியைச் சொல்லி நான் ஒருபோதும் பேரம் பேசியதில்லை. கேட்ட தொகைக்கு ஒப்புகொள்வதுதான் வழக்கம். மகளை வளர்த்துவதற்கு மாமியார் கேட்ட ஐந்து ரூபாயை அப்படியே ஒப்புக்கொண்டதால்தான் நான் இந்த தொழிலுக்கு வந்தேன் "


தேவைகளுக்கு தட்ட தடையற்ற வீடுகளில் நிரம்பிக்கிடக்கும் காமத்தின் ஆளுமைகள் ஒழுக்கத்தின் பின்னறைகளில் தலைமறைத்து கொண்டிருக்கின்றது. பணத்தை பின்புலமாக்கிக் கொண்டு பருத்திருந்த ஆண்மையின் ரகசியங்கள் ஊற்றி நிரப்பும் கழிவறைகளாகவே கருதப்படுகின்றனர் பாலியல் தொழிலாளர்கள்.

எந்த உறவுகளுக்காக தன் நிஜத்தை மாய்க்கத் தொடங்குகிறார்களோ அவ்வுறவுகளின் தலைமுழுகலில்தான் தடுமாறி களைக்கின்றனர். யாராலும் தீண்டப்படாது ஓடியும் ஒளிந்துமாய் துயரங்களின் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவ்வுடல்களின் குடி கொண்டு ஊனப்பட்ட உணர்வுகளின் சாயல் வெளிப்பட்டு தோள் சாய்தலுக்கு ஏங்குகின்றனர்.

மர்மமான முறையில் நளினியின் சகப்பாடி அம்முவின் மரண சோகம் படிப்பவர்களையும் கவ்விக்கொள்கிறது.

தற்கொலை என முடிவாக்கி மூடிவிட்டது. எல்லாவித ஆதாரமிருந்தும் ஊகங்கள் சரியாக இருக்கும் பட்சத்திலும் அக்கொலை தற்கொலையாகவே தற்காத்து கொண்டது. எத்துணை குடும்பங்களின் ஆசுவாசமாக வாழுமவர்களை தன் மகளென்றோ சகோதரி என்றோ சொல்லிக்கொள்ள முனைவதே இல்லை. காலக்கடைசியில் அநாதைகளென அடையாளப்பட்டு அடங்கிவிட்டிருக்கும் அவ்வுயிர்.



”குழந்தைகளை வளர்ப்பதற்காக நான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். எல்லா தொழில்களையும் போல் இதிலும் சலிப்பு தட்டிய பிறகும்கூட இதில் ஈடுபட்டதும் குழந்தைகளை நினைத்துதான் இப்போது அந்த பொறுப்பும் இல்லாமலாகி விட்டது."


ஒழுக்கவாதிகளின், காவல்துறையினரின் துன்புறுத்தலின் வேண்டுமென்ற துச்சமும் பரிகசிப்பும் வெடித்துப்போன வாழ்வின் மிகப்பெரிய பிளவை மேலும் விரிசலாக்குகிறது. தற்பொழுது உடைந்திருக்கும் ஒவ்வொரு விலங்கின் கண்ணியிலும் துயரின், தனிமையின் தழும்பிருக்கும். எல்லாவற்றிலிருந்தும் வெளியேறவியலாது கட்டுண்ட பிறகு அவ்வாழ்க்கைக்கு சரியான அங்கீகார சொற்ப்பொழிவுகளுக்கு தன்னைத் தயார்படுத்தி பெருமொரு கூடமாய் வலுத்து நிற்கின்றது. அக்கூட்டத்தின் தலைவியாய் இன்று நின்றிருக்கும் அப்பெண்மணி நளினி ஜமீலா கம்பீரம்.

பெருமொரு நீர்க்குவியலுக்கு மத்தியில் பெருத்திருக்கும் பாறையின் உறைவும், வழிநெடுக தடம் தேடியலையும் கூழாங்கற்களின் ஏக்கமும் நின்றுவிடத்தானே. முதலீடாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் பாலியல் தோழிகளின் எதிர்பார்ப்புகள் ஈடேறவும் அதற்கான பிரயாணத்தில் நளினியின் எண்ணம் வலுப்பெற சமூகம் வழிதர வேண்டும்.

அந்தந்த நாட்களின் பின் அவசியப்பட்டிராத நாள்காட்டி துண்டு காகிதங்கள் போல வீசி எறிகின்ற அவர்களின் கோஷங்கள் சீர்படுத்திவிட வேண்டும். அக்கோஷங்களின் தொலைவு குறைக்க ஆவண செய்தல் வேண்டும்.

குற்றமென்று விரட்டப்படுகின்ற இப்பெண்களின் சரிபாதி வந்திணங்கும் ஆடவருக்கும்தானே. முற்றுப்பெறவியலாத இத்தேவையின் ஒழுங்கீனம் ஒழுங்காக்கப்படவேண்டும். பாலியல் தொழிலாளியென சொல்லிக்கொள்ளும் உரிமம் தரப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளும் நளினியின் கூற்றுகளின் குறைபாடேதும் இருப்பதாய் தெரியவில்லை.

கைவிடப்பட்டோ அல்லது கைவிலக்கபட்டோ தடுமாறி உடம்புகளை வாடகையாக்கிக் கொண்டிருக்கும் அவ்விரவு மெர்க்குரிப்பூக்களை தீயிட்டு பொசுக்கி கலாச்சார குளிர்காய அவசியப்படாதிருந்தால் போதுமானது.

மேலும் இப்புத்தகம் பற்றிய மற்ற சில விமர்சனங்கள்...

1.பாதித்தது
2.என் பெயர் நளினி ஜமீலா
3.நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்

4 comments:

வால்பையன் said...

நலமா!?


ரொம்ப நாள் ஆச்சே பேசி!

டவுசர் பாண்டி... said...

உங்களின் மொழி ஆளுமை அசாத்தியமானது, அதன் பின்னால் இருக்கும் உழைப்பும் பாராட்டுக்குறியது. ஆனால் கவிதைக்கும், உரைநடைக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.

நீள நீளமான வரிகளும், இரண்டு மூன்று வார்த்தைகளை ஒன்றாயினைக்கும் (ஒன்றாக இனைக்கும்) வித்தைகள் வாசிக்கிறவனுக்கு அலுப்பையே தரும். அலுப்புகளின் ஊடாக அணுகப் படும் எந்த ஒரு படைப்பும் வெகுசன ஊடகத்தில் அங்கீகாரத்தை பெற்றுத் தராது.

வாழ்த்துக்கள்....

ஆயில்யன் said...

//எந்த உறவுகளுக்காக தன் நிஜத்தை மாய்க்கத் தொடங்குகிறார்களோ அவ்வுறவுகளின் தலைமுழுகலில்தான் தடுமாறி களைக்கின்றனர்.//

உண்மை!


நூல் பற்றிய விமரிசனத்தில் உங்களின் மொழி நடை அருமை!

டவுசர் பாண்டியின் சில கருத்துக்களோடு ஒன்றிணைகின்றேன்!

தொடருங்கள்!

Anonymous said...

அருமையான பகிர்வு..பதிவு!