Wednesday, August 10, 2011

இருட்டு முத்தம்




சாமங்களில் அவ்வப்போது
எனது அறையில்
உலவத் தொடங்கியிருக்கின்றது

ஒரு அணிலின் சத்தம்
அதற்கு நீளம் குறைந்திருக்கின்றது
உதடுகளை தின்றபடியே
ஏதேதோ பிதற்றியது
அசதியில் தூங்கி விட்டேன்
அல்லது மயக்கத்திலுமாகலாம்
விடியல் பொழுதில்
படுக்கையெங்கும் கோடுகள்
நிசப்தமாய் பூத்திருந்தது
நீ தந்துவிட்டுப்போன
முற்றத்து மல்லிகை

Tuesday, August 9, 2011

சிதறல்


.



பறக்கவோ பற்றவோ
தோதில்லமல்
பக்கங்களின் அலைக்கழிப்பில்
தானும் உதிர்க்கின்றது
எழுத்துக்களை
வெளியெங்கும் மழை
பச்சை
ஊதா
கருநீலம்
மயிலெங்கும் காடு.

Sunday, August 7, 2011

கேள்வி பதில்

ஈசலின் இறகை பற்றித்திரிந்த வெளிச்சத்தில் இன்னும் அடையாளம் காணவியலாத ஓவியங்கள் பலவுண்டு .
வயதுகளை பயணித்த சம்பவங்களும் அதைப்போலவேதான்.நீளப்பட்ட கிளை முறித்தும் முளைத்தும் காலத்திற்க்கேற்ப கடந்து வந்தாயிற்று. செல்ல வேண்டிய தூரங்கள் இன்னும் இருப்பினும் அல்லது இறப்பினும் தங்கிவிட்ட நினைவுகளின் சாயலை யாராலும் மறக்கவியல்வது சற்று கடினம்தான்.
புள்ளிகளால் அடுக்கப்பட்ட அவ்வெண்ணங்களை பகிர முத்துக்கா அழைத்திருக்கிறார். அழைத்தமைக்கு நன்றி தாமதத்திற்கு மன்னிக்கவும்.
நீங்கள் வி
ரும்பும் மூன்று விஷயங்கள் ?
சின்னசிறு மழலைக்கு
பெரிய சட்டை அணிந்து பார்ப்பது.
எதிர்பாராத மழையில் நனையும் மரம் .. சாலை,, மனிதர்கள்
கவிதைகளை கணவரோடு பகிர்வது
நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள் ?
தண்டன எனப்படும் மன்னிப்பு

எனது ஞாபகமறதி
புறம் பேசுதல்
பயப்படும் மூன்று விஷயங்கள் ?
தனிமை.
இரவு
சாலைக்கடப்பது.
உங்களுக்கு புரியாத மூன்று விஷயம் ?
வழிபாடு
அரசியல்
இன்னும் முளைக்கின்ற சாமியார்கள்

உங்கள் மேஜையில் இருக்கும் மூன்று விஷயங்கள்?
லாப்டப்
கைப்பேசி
கொஞ்சம் தூசி
உங்களை சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள் ?
பத்தாம் வகுப்பு காதல்
நகைச்சுவை
குழந்தையின் பொய்

தாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் காரியம் ?
அலுவலக பணியில்லாதிருப்பது
சமையல் கற்று கொள்ளவது
புதிய மொழி கற்று கொள்வது
நிறைய தூங்குவது. :) ஒண்ணு ஜாஸ்தி

வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள் ?
என் மரண செய்தி கேட்டு வருந்த சில கண்களின் துளி
பிடித்தமானவரின் அருகாமை
குழந்தைகளின் வாழ்விற்கான பாதுகாப்பு.

உங்களால் செய்யது முடிக்கவேண்டிய விஷயங்கள்?
எழுத நினைப்பதை செயல்படுத்துவது
கேட்க்க விரும்பாத மூன்று விஷயங்கள்
சீரியல் கதை
அவசர ஊர்தியின் அழுகை
விபத்து
கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள் ?
புதிய மொழி
சமையல்
குழந்தை கதைகள்.

பிடித்த மூன்று உணவு ?
இட்லி
பொங்கல்
சாம்பார் வடை
அடிக்கடி முனுமுக்கும் பாடல் ?
தவமின்றி கிடைத்த வரமே...
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
கதைகளை பேசும் விழி அருகே

பிடித்த மூன்று படங்கள்
(malayaalam) நீலத்தாமரை
சதி லீலாவதி
தில்லுமுல்லு.
இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயங்கள் ?
அப்படி எதுவும் இல்லை ஒவ்வொரு சூழலும் வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தை சொல்கிறது
எது இல்லையாகினும் வாழ்தல் அவசியமாகிறது.

Saturday, December 18, 2010

லில்லினாவுக்காக...

எனது கிராமத்தின் வேர்கள் எனக்குள்ளிருக்கின்றதென
அவள் கூறினாள்.
ஆனால் நான்,

ஏழாவது மாடியில் குடியிருக்கின்றேன்.
வேர்கள் இப்பொழுது ஜன்னலை பற்றி
சட்டி செடியாய் வளர்கிறது.
பழைய குணங்கள் ஒவ்வொன்றாய்
ஒவ்வொரு வசந்தத்திலும்
பூக்களாகிறது.
கண்களின் கருணைகொண்டு
அதீத அழகுபெற்றிருக்கின்றது.
அவையின் சுருண்ட வேர்கள்
நம்மை நோக்கி நீளுகிறது.
அவற்றிலிருந்து வித்தியாசப்படுகின்ற நமது தர்ம சங்கீதங்கள்.
என்னவென்றறியாத ஏதென்றறியாத
ஒரு அந்நிய நாட்டிலிருந்து அப்பா வந்தார்.
குடும்பத்தின் சாயல் அவரில் இழந்துகொண்டிருந்தது.
பரிணாமங்களில் எப்போதுமே ஒரு பிளவுண்டு.
காதலில் பொறாமைப்பட எந்த உரிமையும் எனது நண்பன் தந்திருக்கவில்லை.
குளத்துமீனுக்கு சாப்பாடு மேசையின் மீது இருக்க ஆசை.
முட்டைக்கு யாராவது தன்னை தின்னவேண்டுமென்ற மோகம்.
விரியத் துடிக்கும்
கனவுகளின் அந்தரங்கம் பிளந்த நிசப்தம்.
இறைச்சி துண்டுகளாய் தரையில் நெளிந்து விழும்.
சாமான்கள் சங்கமித்து நிற்கின்றன
பச்சைவிளக்குபார்த்து.
இரவுகளின்
கொடுக்கலும் வாங்கலும் தீர்த்திருந்தது.
இரட்டையர்கள் ஒற்றைகளாய் பிரிந்திருக்கின்றது.
விரகங்களின் பாதையில் தொடர் வண்டிக்கு கீழ்
நசுங்கியிருந்தது
உறங்க முடியாத நிலை தளர்ந்துபோன தெருவீதி
தூக்க மாத்திரை தேடுகிறது.
'தயவு செஞ்சி அழாதே ' அவன் கூறுகிறான்
எனது கிராமத்தில் ஒரு சொல்லிருக்கின்றது
கொஞ்சம் மூத்திரம் சிதற ஆண்களுக்கு
எப்போதும் முடியும்.

மலையாள மூலம் - அய்யப்ப பணிக்கர்
தமிழில் - யாழினி

Monday, September 20, 2010

சஞ்சாரம்

பிரக்ஞைகளை கூடுகட்டி
பெருத்திருந்த
வயிற்றின் தாரைகள்
குறுக்கும் நெடுக்கும்
பலதுமாய்
சுருங்கிக்கிடக்கிறது
மௌனத்தின் மெய்கள்
பதப்படுத்திய
உராய்வுகளின் வெளிச்சம்
பலமாய் பலவீனமாய்
பிறந்து கொண்டிருக்கின்றது
அறை முழுவதும்
அடக்கவியலாத
ஆளுமைகளைக் கொண்டே
ஒவ்வொரு முறையும்
கருத்தரித்து விடுகிறேன்
இம்முறையும்

Thursday, July 8, 2010

நளினி ஜமீலா - புத்தக விமர்சனம்


திக்கற்றவர்களாய் திரிகின்ற பாலியல் தொழிலாளர் கனவுகளின் கரியபாகத்தின் வெளிச்சம்தான் திருமதி நளினி ஜமீலாவின் சுயசரிதை. உணரவியலா உள்வலிகள் ஒன்றுகூடிய வலிமையென தன்னை நிலைப்படுத்தி கொண்டிருக்கும் நளினியின் இப்புத்தகத்தை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப் அவர்களுக்கு நன்றி.

விழியகற்றவியலா ஓயாத ஏமாற்றங்கள் கண் தூவிச்சென்ற உறுத்தலின் கலங்கலில்தான் பாலியல் தொழிலாளர்களின் காலங்கள். எதிர்பார்ப்புகளற்ற வடிவம் வாழ்வாகாது. ஆனால் அவைகள்தாம் அழகையும் அலங்கோலத்தையும் இட்டு நிரப்புகிறது. உள்ளுக்குள் உருண்டு சரியும் அவ்வெதிர்பார்ப்புகள் நுரைகளிளிருந்து தட்டி விழுங்கிய ஒற்றை உருளை மெல்லிய வலியோ வலியொத்த அவஸ்தையோ கொல்லன் துணிந்திருந்த வாழ்க்கையின் தேவையாகப்படுகின்றது.

ஒழுக்கமென்பதன் அரிதாரங்களைப்பூசி தொண்டைக்கிழிய பிரசங்கிக்கும் ஒட்டு மொத்த திரைகளையும் விலக்கி போட்டிருக்கும் பகிர்வு. எனக்குத் தெரிந்து 'அழகிகள் கைது' , 'கையும் களவுமாகப் பிடிபட்டனர்' பத்திரிகைகளில் படித்த ஞாபகம். பிற்பாடு காலங்களில் அச்செய்தியை படிக்காதிருந்தது என் ஒழுக்கத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

பாலியல் தொழிலுக்கென திட்டமிட்டு தன்னைத் தயார்ப்படுத்தி வந்திருந்தவர்களென்று யாருமிருக்கமாட்டார்கள். தன்னைச் சுற்றி பிரதிபலிக்கும் கருணையற்ற இல்லாமைகளின் உக்கிரம் தருகின்ற உபத்திரவங்களை குறைத்துக்கொள்ள சமூகம் கொடுக்கும் அல்லது சமூகத்துக்கு கொடுக்கும் கண்ணீரே இத்தொழில். காமத்தணிவு.



"கூலியைச் சொல்லி நான் ஒருபோதும் பேரம் பேசியதில்லை. கேட்ட தொகைக்கு ஒப்புகொள்வதுதான் வழக்கம். மகளை வளர்த்துவதற்கு மாமியார் கேட்ட ஐந்து ரூபாயை அப்படியே ஒப்புக்கொண்டதால்தான் நான் இந்த தொழிலுக்கு வந்தேன் "


தேவைகளுக்கு தட்ட தடையற்ற வீடுகளில் நிரம்பிக்கிடக்கும் காமத்தின் ஆளுமைகள் ஒழுக்கத்தின் பின்னறைகளில் தலைமறைத்து கொண்டிருக்கின்றது. பணத்தை பின்புலமாக்கிக் கொண்டு பருத்திருந்த ஆண்மையின் ரகசியங்கள் ஊற்றி நிரப்பும் கழிவறைகளாகவே கருதப்படுகின்றனர் பாலியல் தொழிலாளர்கள்.

எந்த உறவுகளுக்காக தன் நிஜத்தை மாய்க்கத் தொடங்குகிறார்களோ அவ்வுறவுகளின் தலைமுழுகலில்தான் தடுமாறி களைக்கின்றனர். யாராலும் தீண்டப்படாது ஓடியும் ஒளிந்துமாய் துயரங்களின் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவ்வுடல்களின் குடி கொண்டு ஊனப்பட்ட உணர்வுகளின் சாயல் வெளிப்பட்டு தோள் சாய்தலுக்கு ஏங்குகின்றனர்.

மர்மமான முறையில் நளினியின் சகப்பாடி அம்முவின் மரண சோகம் படிப்பவர்களையும் கவ்விக்கொள்கிறது.

தற்கொலை என முடிவாக்கி மூடிவிட்டது. எல்லாவித ஆதாரமிருந்தும் ஊகங்கள் சரியாக இருக்கும் பட்சத்திலும் அக்கொலை தற்கொலையாகவே தற்காத்து கொண்டது. எத்துணை குடும்பங்களின் ஆசுவாசமாக வாழுமவர்களை தன் மகளென்றோ சகோதரி என்றோ சொல்லிக்கொள்ள முனைவதே இல்லை. காலக்கடைசியில் அநாதைகளென அடையாளப்பட்டு அடங்கிவிட்டிருக்கும் அவ்வுயிர்.



”குழந்தைகளை வளர்ப்பதற்காக நான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். எல்லா தொழில்களையும் போல் இதிலும் சலிப்பு தட்டிய பிறகும்கூட இதில் ஈடுபட்டதும் குழந்தைகளை நினைத்துதான் இப்போது அந்த பொறுப்பும் இல்லாமலாகி விட்டது."


ஒழுக்கவாதிகளின், காவல்துறையினரின் துன்புறுத்தலின் வேண்டுமென்ற துச்சமும் பரிகசிப்பும் வெடித்துப்போன வாழ்வின் மிகப்பெரிய பிளவை மேலும் விரிசலாக்குகிறது. தற்பொழுது உடைந்திருக்கும் ஒவ்வொரு விலங்கின் கண்ணியிலும் துயரின், தனிமையின் தழும்பிருக்கும். எல்லாவற்றிலிருந்தும் வெளியேறவியலாது கட்டுண்ட பிறகு அவ்வாழ்க்கைக்கு சரியான அங்கீகார சொற்ப்பொழிவுகளுக்கு தன்னைத் தயார்படுத்தி பெருமொரு கூடமாய் வலுத்து நிற்கின்றது. அக்கூட்டத்தின் தலைவியாய் இன்று நின்றிருக்கும் அப்பெண்மணி நளினி ஜமீலா கம்பீரம்.

பெருமொரு நீர்க்குவியலுக்கு மத்தியில் பெருத்திருக்கும் பாறையின் உறைவும், வழிநெடுக தடம் தேடியலையும் கூழாங்கற்களின் ஏக்கமும் நின்றுவிடத்தானே. முதலீடாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் பாலியல் தோழிகளின் எதிர்பார்ப்புகள் ஈடேறவும் அதற்கான பிரயாணத்தில் நளினியின் எண்ணம் வலுப்பெற சமூகம் வழிதர வேண்டும்.

அந்தந்த நாட்களின் பின் அவசியப்பட்டிராத நாள்காட்டி துண்டு காகிதங்கள் போல வீசி எறிகின்ற அவர்களின் கோஷங்கள் சீர்படுத்திவிட வேண்டும். அக்கோஷங்களின் தொலைவு குறைக்க ஆவண செய்தல் வேண்டும்.

குற்றமென்று விரட்டப்படுகின்ற இப்பெண்களின் சரிபாதி வந்திணங்கும் ஆடவருக்கும்தானே. முற்றுப்பெறவியலாத இத்தேவையின் ஒழுங்கீனம் ஒழுங்காக்கப்படவேண்டும். பாலியல் தொழிலாளியென சொல்லிக்கொள்ளும் உரிமம் தரப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளும் நளினியின் கூற்றுகளின் குறைபாடேதும் இருப்பதாய் தெரியவில்லை.

கைவிடப்பட்டோ அல்லது கைவிலக்கபட்டோ தடுமாறி உடம்புகளை வாடகையாக்கிக் கொண்டிருக்கும் அவ்விரவு மெர்க்குரிப்பூக்களை தீயிட்டு பொசுக்கி கலாச்சார குளிர்காய அவசியப்படாதிருந்தால் போதுமானது.

மேலும் இப்புத்தகம் பற்றிய மற்ற சில விமர்சனங்கள்...

1.பாதித்தது
2.என் பெயர் நளினி ஜமீலா
3.நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்

Wednesday, July 7, 2010

மூன்று கவிதைகள்

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

********

துயரங்களும் துயில்தல்களும்
ஆழத்தளும்பிய நீரில் நீந்துகிறது.
பற்றாக்குறையின் பிரதிபலிப்புகளில்
தன்னைப் பார்த்திருந்த
பரிதி
சடங்குப்பெண்ணின்
சாயலைக்கொண்டு
மூழ்கவெண்ணுகிறது.

********

காத்திருக்கக் கற்றுக்கொண்ட
காலச்சிறைக்குள்
எந்த அற்றத்திலிருந்தோ
நீண்டு வந்த வேரின்
கிளைகளில் முடிந்திருக்கிறேன்
கனவுகளை
அவ்வண்ணமாகவே..